பறவையொன்று

வியாழன், 12 நவம்பர், 2009


பறவையொன்று
கொலை செய்யப்பட்டிருக்கிறது

முகம் சிதைக்கப்பட்டு
இறக்கைகள் கிழிக்கப்பட்டு
கால்கள் உடைக்கப்பட்டு
குருதி சிந்திய நிலையில்
கொலைசெய்யப் பட்டிருக்கிறது.

பட்டப்பகலில்
இனந்தெரியாதவர்களால் நிகழ்த்தப்பட்டதாக
சொல்கிறார்கள்
வன்முறையின் அதிகபட்ச வெறியை காரணமின்றி
அந்த உயிரின்மீது இறக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

துப்பாக்கிகளுக்கு கரம்கூப்பி
இறந்துபோன உறவுக்காக
பறவைகள் மௌனமாய் அழுகின்றன

ஒரு அப்பாவிப் பறவையின் உயிருக்கு
அதன் விருப்பின்றி விடுதலையளித்து
மரணத்தை நியாயப்படுத்தி
கூடுகளைத் தாங்கும் கிளைகளை முறித்து
எல்லாவற்றையும் கடாசிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அராஜக புருசர்கள் வெறிப்புன்னகையில்
வன்முறைகளும் ஆதிக்க வெறிகளுமே தெரிகிறது.
இவர்களுக்கு எப்படித்தெரியும்
எங்களது கண்ணீரும் வலியும்?

விழிகள் வீர வரலாறு எழுதட்டும்.


விழிகள் வீர வரலாறு எழுதட்டும்.

பேசமறந்த பொருளல்ல நீ
தேச வரைபடத்தில்
வீர விழுதெறிந்து நிற்கும்
தல விருட்சம்.

செங்குருதியின் நிறமெடுத்து
வரலாறு எழுதிய
போர்க்கால சித்திரமாய்
நீயிருக்க…..

வர்க்க வேறுபாடுகளும்
சமுதாய சம்பிரதாயங்களும்
முள்ளாய் உந்தன்
முலைகளை கிழித்தெறிய - நீ
சீரழிந்து போவதேன் ?

நிலவும் , மலரும், பதுமையும்
உனக்கென உவமையாய்க்; கூறும்
ஆசை மொழியல்ல.

அடுப்படியும்
மந்திரக் கட்டிலும்
உனது சொர்க்கமல்ல.

இது
உனக்கு விலங்கிடுவதற்கான
சூழ்ச்சி அரசியல்!

தோழியே !
கற்பென்னும் ஆயுதம் தரி
தெருவில் நீ துணிந்து நட
உல்லாசமாய் பறந்து திரி
வானத்தைப் பார் -இந்த
வையகத்தைப் பார்
அறிவியல் ப+ர்வமாய்
வேற்றுக் கிரகத்தைப் பார் – ஆனால்
உல்லாச புரியாய் இருந்து விடாதே !

உனக்கான சமுதாய விலங்குகள்
உடையும் வரை
விடியலின் வெளிச்சத்தை – நீ
தரிசிக்கும் வரை
உனது பாதச் சலங்கைகள்
வீர நர்த்தனமிடட்டும்
விழிகள் வரலாறு எழுதட்டும்.

சொல்லாயோ வாய் திறந்து


சொல்லாயோ வாய் திறந்து
இனியவளே !
நீ பிரகாசமானவள்
ஆதலால் நீ
என்னோடு இருப்பாய் என
கனவு கண்டேன் - இப்போது
எல்லாமே கானல் நீராக…..

அப்போதெல்லாம்,
கட்டி அணைக்கையிலே
காதுக்குள் மெல்லக்
கதை பேசுவாயே
முத்தங்கள் பொழிய நினைத்தால்
முத்தத்தால் எனை நனைப்பாயே
இப்போது எங்கே எனைவிட்டுப் பிரிந்தாய் ?

என்மார்பில் எகிறிக் குதித்து
கைகளால் தடவி தனத்தில்
முகம் புதைத்து சிணுங்குவாயே
தட்டினால், வெட்கம் மேலிட
கண்களை மூடிக் கெஞ்சுவாயே
இதையெல்லாம் மறந்து, இறந்து போக
உன்னால் எப்படி முடிகிறது ?

உனது முத்தச் சத்தங்களால்
என் உயிருக்குள்
உனைப் போன்று
ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறேன்….
எனக்குள் நீ வாழ்வதாய் நினைத்து.

என் அன்புக்குரிய
சின்ன மழலையே… செல்ல மகளே…..
மீண்டும் - என் கருப்பையினுள்
கருவாகிப் பிறப்பெடுத்து
“அம்மா” என்று
சொல்லாயோ வாய் திறந்து.

பூமி செத்துவிடப் போகிறது…..


பூமி செத்துவிடப் போகிறது…..

மனிதனை விட்டுவிட்டு
பூமி செத்துவிடப் போகிறது

மனித வாழ்க்கையின்
இறுதி நகர்வுகளை - இறைவன்
கடைசி நிகழ்காலத்தின் நிமிடங்களிலேயே
கையளிக்கிறான்

மனிதனோ திக்குமுக்காடி
இன்னும் கொஞ்ச நாள்
தாவென்று கெஞ்சுகிறான்

துப்பாக்கியால்
இருளுக்கு வெளிச்சம் போட பலர்.
சூரியனோ சீக்கிரத்தில்
மறைந்து போக துடிக்கிறான்

இன்னொரு
கிரகத்தை நோக்கி
நகருங்கள் என்று விஞ்ஞானம்
வழிகாட்டுகிறது – கையில்
அணுகுண்டை வைத்திருந்தபடி.

இயற்கைத் தாயின்
கண்கள் வெடித்து
குருதி பீறிடுகிறது
சுனாமியாய்……புயலாய்……
பூகம்பமாய்………………..
இன்னும் வௌ;வேறு வடிவங்களில்…..

கடவுள் - இப்போது
கண் பொத்தி காது பொத்தி
வாய் பொத்தி அழுகிறான்…
காற்றாய் கரைந்து காற்றிலே
கல்லறையாகிவிட நினைக்கிறான்;
பூமி; செத்துவிடப்போவது
அவனுக்கு மட்டும் தான் தெரியும்

பேதை மனிதனோ துப்பாக்கிக்கு
வைத்தியம் பார்க்கிறான்
பூமிக்கு கல்லறை கட்டுவதற்கு.

உயிர் எரிந்து ஓலமிடும் குரல்…….


உயிர் எரிந்து ஓலமிடும் குரல்…….
ஆழிப்பேரலையே…………!
அடங்கி நீ போய்விட்டாய்
அலையாய் நீ கொண்டுவந்த துன்பம்
மலையாய் மனதை இடித்து நிற்கிறது…

நீள் அலைகொண்டு நீ
மொட்டுகளை
உருக்குலைத்துப் போட்டாய்
பூக்களை
கசக்கிப் பிழிந்தாய்
வேர்களை
அடியோடு பிடுங்கியெறிந்தாய்
காற்று வாக்கில்
பிணங்களை வீசினாய்……..

யுத்தம் சப்பிய
நடைபிணங்களாய் நாமிருக்க
மீண்டும் எங்கள்
முற்றத்தில்
இழவு வைத்துப் போனாய்
இன்னும் அந்த
ஓப்பாரி சுரமிழக்கவில்லை

எனதுயிர் எரிந்து
வானுயர ஓலமிடுகிறது
உறவுகளே!
ஆழிப்பேரலைகளால் காவுகொண்ட
ஆத்மாக்களே – எங்களுயிர்
உங்களுக்காய் அஞ்சலிக்கின்றது……….
சிரம் தாழ்த்தி
விழிகள் கசிகின்றது…….
விடியலின் விளக்கெடுத்து
ஒளியேற்றுகின்றோம் -உங்கள்
ஆத்மா சாந்தியடைய.

மகவொன்றின் பிறப்பில்……..


மகவொன்றின் பிறப்பில்……..
சாம்பல் பூத்த மேட்டில்
விடிவெள்ளியின் பார்வை
பூத்திருக்கிறது
இரவிலும் பகலிலுமாக.

ஒரு சூரியனாய்
ஒளிகொள்ளப் போதாவிட்டாலும்
விரும்பி ஒளிசிந்தி நிற்கிறது.

மெழுகுவர்த்திகளின் ஆத்மாக்கள்
ஆயிரம் சூரியனாய் - இந்த
தேசத்தில் உதிக்கப்போகிறது
இனவாத இருட்டின் திரைகளை
சுட்டெரிப்பதற்காக.

பறவைகளெல்லாம்
தம்மை அழகுபடுத்தி - இப்போது
பூபாளமாய் புன்னகைக் குரலிடுகிறது.

மேகங்களெல்லாம் தொலைவிலுள்ள
உறவுகளுக்கு நல்லவல்ல
செய்தி சொல்ல
வரிசையாய் நகர்கிறது

கார்த்திகைப் பூக்களின்
மகரந்தப் பொடிகள்
இன்பக் கருக்கொள்ள
மழலைகளின் பேச்சுகள்
தேசிய கீதமாய் ஓலிக்கிறது

நாளைய முன் விநாடிகளில்
மகவொன்றின் பிறப்பில்
கார்த்திகைப் பெண்களின்
மகிழ்வைப் போல ஆடிப்பாட - தமிழ்
உறவுகள் ஆயிரம் ஆயிரம் லட்சங்களாய்
தொப்பூள் கொடி மூலத்துடன

வானெழுந்து ஒளியேற்று !


வானெழுந்து ஒளியேற்று !

வருடம் ஒன்றாய் உனதொளி
வாசல் வந்து போகிறது.

நெருடல் ஏதும் இல்லாமல் - தேகம்
நெருப்பாய் நின்று எரிகிறது.

ஒரு நாளில் உன்நினைவும்
இனிவின்றி கழிகிறது - ஏதும்

தருவாய் என்று நினைத்திருந்தோம்
இன்னலை யெல்லவா தந்து போகிறாய்.

ஒரு வார்த்தையேனும் பேசுவாய் என்றால்
மௌனத்துடனேயே திரும்புகிறாய்.

இம்முறை ஏது கொணர்ந்தாய் எமக்கு?

காரிருள் விலக்கி – எங்கள்
காரியம் நிறைவேற,

இங்கு நீ தங்கிவிடு.

தமிழர் தேசமெங்கும் - இன்பம்
பொங்கிப் பிரவாகிக்க

தீப ஒளியே !
வானெழுந்து ஒளியேற்று!

வலியோடு வா


வலியோடு வா

தூரம் அதிகமில்லை
கூப்பிடு தூரம் வரையில் தான்
இலக்கு.

நெஞ்சிலே வலி……..
எட்டி நடக்கும் பாதங்களிலும் வலி………….
கண்களிலே தூக்கம்…….
கைகளிலே சோர்வு…………………

இன்னும் சொற்ப தூரம் தான்
வலியோடு விரைந்து வா…..!

தாயின் கருப்பையின் வலி
மழலையின் பிறப்புக்குத்தான்

வித்தின் வெடிப்பு
நாற்றின் வளர்ச்சிக்குத்தான்

ஏழiயின் உழைப்பிலே வலி
ஒரு வேளை கஞ்சிக்குத்தான்

குயிலின் குரலில் வலி
விடியலின் செய்திக்காகத்தான்

செடியின் மொட்டிலே வலி
பூவொன்றின் மலர்வுக்குத்தான்

இடி, மின்னலால்
மோதும் முகிலுக்கு வலி
மண்ணில் மழைக்குத்தான்

தோழனே!
வலி என்பது உனக்கு மட்டுமல்ல
இயற்கைக்கும் வலிகள் உண்டு.
பூமியும் இதைத் தாங்குகிறது.

வலிகளைத் தாங்குபவனுக்கே
இந்த வையகம் சொந்தம்.

இன்னும் இன்னும்
சிந்தனைகளோடு அடைகாக்காதே
சிந்தனை உணர்வுகளுக்கு உருக்கொடு!

வலிகளைத் தாங்கி வா
வாசல் திறந்து வானத்தில் ஏறலாம்.

நன்றி : உதயன் சூரியகாந்தி

ரோசி உனை பாவத்தில் இருந்து மீட்பேன்




(நாய்களால் துரத்தப்பட்டு காணாமல் போன எனது செல்லப்பூனையை பிரிந்த வேதனையில் எழுதிய கவிதை)

ரோசி உனை பாவத்தில் இருந்து மீட்பேன்
உனை நான்
கொடிய பாவத்தில் இருந்து
மீட்டுச் செல்வேன்
ஒரு கர்த்தராக இல்லாமல்
காதலனாக………. நண்பனாக……….

வாயில் திண்ணையில்
பசித்த வேட்டை நாய்போல
வீணீர் வடித்துக்கொண்டிருக்கும் நாய்களுக்கு
ஒன்றா இரண்டோ துண்டு இறைச்சிகளை
வீசிவிட்டு உன்னை அழைத்துச் செல்வேன்
என்னுயிரை காவல் வைத்து

இப்போதும்என் மனதில்
ஊள்ளாந்த தளங்களைத் தொட்டு
விரிந்த படியே செல்கிறதே உன் நினைவு
மௌனத்தின் அச்சத்தை எவ்வாறு உடைப்பேன்?
புன்னகையையோ? அல்லது ஒரு
புல்லாங்குழல் இசையையோ கொண்டு
உடைத்து விட்டுப் போவேன் என்றால்
நீ சேதப்பட்டுவிடக் கூடாது.

ரோசி!
நீ பயப்படாதே! – உனது
விழிகளில் வழியக்கூடாது கண்ணீர்!
புல்லும் பூவரசம் பூவும்
ஓடித்து நான் தருவேன் - உன்
பஞ்சுமேனியை இருத்தி உறக்கம் போட
வெண்பருத்தி உடைத்து மெத்தைகள் சமைப்பேன்
ரோசி நீ பயப்படாதே! – உன்னோடிருந்து
காதலனாக…… நண்பனான……
நான் உனைக் காப்பேன்

சித்திரையே சிங்காரி


சித்திரையே சிங்காரி – சின்னச்
சிரிப்புடனே அள்ளும்மன மகமாரி
இத்தரையில் மாந்தர்கள் துயரால்
செத்த கதை தெரியலையோ
புத்திக்காரியென புழகாங்கித மடைந்தோம்
புத்தனுக்கும் சொந்தக்காரி யென்றறிந்தோம்
சத்தியமாய் சொல்கிறோம் சகவாசம்
உன்னுடன் வேண்டாம் !
சித்திரையில் நீ வருவதால் - எங்கள்
சீற்றம் குறைய சமாதானம் கொண்டுவா?
பத்தரை மாதத் தங்கமே - இல்லையென்றால்
ஈழத் தமிழனோடு இனிதுற - இல்
அறத்தில் ஊடலோடு கூடல் கொண்டு
புத்திரியைப் பெற்றுத்தா ?