உயிர்த்திருக்கும் உயிர்

ஞாயிறு, 31 ஜனவரி, 2010



உயிர்த்திருக்கும் உயிர்


காதலை அறியாத
இரு மனிதர்கள் போல
ஒருவர் மனசுக்குள் ஒருவராய்
துயில் கொள்ளுகிறோம்……………

என்னை நீயும்
உன்னை நானும்
தெரியாதவர் போலவே
நலத்தில் அக்கறை காட்டி
மனதளவில் இடைவெளி சுருக்கி
விலகிப் போகிறோம்.

எனக்குமட்டும்
கேட்கும் படியாய்
மௌனமாய் அழைப்பாய்
கலைக்க முடியாத மௌனத்துடனும்
விலக்க விரும்பாத விழி திருப்பி
வலிதாங்கி என் இதயம் நகரும்;…….

இப்போது,
தொலைவில் நான்
தொடமுடியாத நிலவாய் நீ
ஆனாலும்
ஒரு கோட்டில் சுழலும்
கோள்களாய்…….

உனது,
நர்த்தனங்களில் கூட்டுச்சேரும்
சலங்கை ஒலிகளில்,
பாவ நளினங்களில் - என்
ஆத்மா கரைகிறது….
புன்னகையின் விரிப்பில்
கனவோடு கனவாய்
உதட்டுக்குள் விழுந்துவிட
துடிக்கிறது விழிகள்.

நீ
உனது கோலங்களை கலைத்து விடாமல்
அப்படியே இரு – நாளை
ஒரு பொழுது மட்டும்.
உனக்கான எனது உயிர்- நீ
என் வாசல் வரும்வரை
உயிர்த்திருக்கும்.